நாமக்கல் மாவட்டத்தில் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள முக்குப்பாறை என்ற பகுதியைச் சார்ந்தவர் சுப்பிரமணி. இவர் நேற்று மாலை தனது கரும்பு தோட்டத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது இவரது கரும்பு தோட்டத்தில் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சுப்ரமணி பள்ளிபாளையம் வருவாய் ஆய்வாளர் கிருத்திகாவிற்கு தகவல் கொடுத்திருக்கிறார். உடனே சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்ட வருவாய் ஆய்வாளர் காவல்துறையை தொடர்பு கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர். இறந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
காவல்துறையின் விசாரணையில் இறந்த மூதாட்டி ஓட பள்ளியைச் சார்ந்த ராமசாமி என்பவரது மனைவி பாப்பாயி(65) என்பது தெரிய வந்தது. இவரது கணவர் ராமசாமி இறந்த நிலையில் பாப்பாயி மற்றும் தனியாக வாழ்ந்து வந்திருக்கிறார். ஓலை பொறுக்குவதற்காக கரும்பு காட்டிற்கு வந்தபோது மூதாட்டி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரை யார் கொலை செய்திருப்பார்கள் என்ற ரீதியில் காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.