சீனாவின் ஷாங்காய் நகரில் வசிப்பவர் மூதாட்டி லியூ. தனக்கு சொந்தமான ரூ.23 கோடி மதிப்புள்ள சொத்துகளை 3 பிள்ளைகளுக்கும் பிரித்து கொடுக்கும் வகையில், உயில் எழுதி வைத்திருந்தார். ஆனால், அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தபோது, பிள்ளைகள் 3 பேரும் ஒரு முறை கூட வந்து பார்க்கவில்லை. இது லியூவுக்கு அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியது. இதனால் ஆவேசமடைந்த அவர், தனது உயிலை மாற்றி, சொத்துகள் அனைத்தையும் தான் வளர்க்கும் நாய், பூனைகள் மீது எழுதி வைத்துள்ளார்.
இதனையறிந்த அவரது பிள்ளைகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால், இதுபோன்ற செயல்களுக்கு அந்நாட்டு சட்டத்தில் இடமில்லை என்பதால், கால்நடை மருத்துவமனையை துவக்கி நாய், பூனையை நன்றாக பராமரிக்கும்படி, விலங்குகள் நல அமைப்பிடம் தொடர்பு கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளன. இதற்கு பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். சீனாவில் வளர்ப்பு பிராணிகள் மீது சொத்து எழுதி வைக்க அந்நாட்டு சட்டத்தில் இடமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.