2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு விஜய் பணியாற்றி வருகிறார். இதற்காக சமீபத்தில் 5 கட்டமாக மாவட்ட பொறுப்பாளர்களை நியமனம் செய்தார். இதற்கிடையே, அதிமுக ஐடி பிரிவு இணைச் செயலாளர் நிர்மல் குமார் மற்றும் விசிகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜுனா ஆகியோர் விஜய் கட்சியில் இணைந்து கொண்டனர். இதையடுத்து, தவெகவின் துணைப் பொதுச் செயலாளராக நிர்மல் குமாரும், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜுனாவும் நியமிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, மார்ச் மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் மக்களை நேரடியாக சென்று சந்திக்க விஜய் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, சென்னை பனையூரில் கட்சியின் தலைமை அலுவலத்தில் பிப்ரவரி 10ஆம் தேதி தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் விஜய்யை சந்தித்தார். இந்த சந்திப்பில் ஆதவ் அர்ஜுனாவும் இருந்தார். இந்த பேச்சுவார்த்தையின் முடிவைக்கொண்டு 2026 சட்டமன்ற தேர்தலுக்காக பிரசாந்த் கிஷோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், பிரசாந்த் கிஷோருடன் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் ஆதவ் அர்ஜுனா வீட்டில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதில், தேர்தல் வியூகங்கள் குறித்தும், கட்சியின் அடுத்த கட்ட பணிகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஒரு குடும்பத்தில் இருந்து ஒரு வாக்கை உறுதி செய்யுமாறு பிரஷாந்த் கிஷோர் அறிவுறுத்தி உள்ளதாகவும், அதற்கேற்ப அடுத்த கட்ட நகர்வுகளுக்கான வியூகம் அமைக்கப்பட உள்ளதாகவும், குறிப்பாக இளைஞர்களின் வாக்கை குறிவைத்து தேர்தல் வியூகம் அமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இளைஞரணி, மகளிரணி, மாணவரணி வரிசையில் குழந்தைகள் அணியை விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அமைக்க உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள அணிகள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி மூன்றாம் பாலினத்தவர்கள், காலநிலை மாற்றம், தகவல் சரிபார்ப்பு, குழந்தைகள் அணி உள்ளிட்ட 28 அணிகள் இடம்பெற்றுள்ளது. தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தவெக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தவெகவில் குழந்தைகள் அணி தொடங்கப்பட்டிருப்பது குறித்து அண்ணாமலை கிண்டலாக பதிலளித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “அரசியல் கட்சிகளில் குழந்தைகளை சேரக்கூடாது. அதுவும் 18 வயதுக்கு உட்பட்டவர்களை அரசியல் கட்சிகள் ஈடுபடுத்தக் கூடாது. அதற்கு ஒரு நண்பர் சொன்னார், “தவெகவில் இருப்பதே குழந்தைகள் தானே?” என்று. குழந்தைகள் அணி பிரிவு ஏன் ஆரம்பித்துள்ளனர்..? 18 வயதுக்கு உட்பட்டவர்களை அரசியலில் பயன்படுத்தக்கூடாது என்று சட்டம் சொல்லும்போது, அவர்கள் எப்படி பயன்படுத்துவார்கள்..? பொறுப்பு கொடுப்பார்கள்..? என்று எனக்குத் தெரியவில்லை. இதற்கு அந்த கட்சிதான் பதிலளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.