சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் கருங்கல்லூர் பகுதியில் அரசு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 144 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு தலைமை ஆசிரியராக ராஜா என்பவர் உள்ளார். இவர் 5ஆம் வகுப்பு மாணவிகளை, தனது அறைக்கு அழைத்து கை, கால்களை பிடித்து விடுமாறும், மசாஜ் செய்து விடுமாறும் கூறி தொல்லை தருவதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த அவர்கள், நேற்று பள்ளியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலின்பேரில், வருவாய் கோட்டாட்சியர் தணிகாசலம், தாசில்தார் முத்துராஜா மற்றும் வட்டார கல்வி அலுவலர் சின்னராசு ஆகியோர் பள்ளிக்கு வந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சமாதானம் அடையாத பெற்றோர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அப்பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு போலீசார் பலத்த பாதுகாப்பு கொடுத்தனர். அப்போது, சிலர் கற்கள் மற்றும் செருப்புடன் தலைமை ஆசிரியரை நோக்கி பாய்ந்தனர். இதையடுத்து, போலீசார் உடனடியாக தலைமை ஆசிரியரை ஒரு அறையில் வைத்து பூட்டினர். பின்னர், அப்பகுதியில் டிஎஸ்பி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்ட நிலையில், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
அதன்பேரில், போராட்டத்தை கைவிட்டு கலைந்துச் சென்றனர். இதையடுத்து, மேட்டூர் மகளிர் காவல்நிலையத்திற்கு தலைமை ஆசிரியர் ராஜா அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணையில், அப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியைகளிடமும் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களிடம் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு தலைமை ஆசிரியர் ராஜாவை போலீசார் கைது செய்தனர்.