அதிமுக ஒன்றாக இருக்க வேண்டுமென அமித்ஷா எவ்வளவோ சொல்லியும் எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “அதிமுகவை இப்படி சின்னாபின்னமாக்கினால் யாருக்குத்தான் கோபம் வராது..? செங்கோட்டையன் மீது எனக்கு எந்த அதிருப்தியும் இல்லை. அவர், கட்சி ஒன்றாக இயங்க வேண்டும் என்று விரும்பக்கூடியவர். அதிமுக ஒன்று சேர நான் எந்த நிபந்தனையும் விதிக்க மாட்டேன்.
சசிகலா, தினகரனிடமும் பேசியுள்ளேன். அதிமுக ஒன்றாக இருக்க வேண்டுமென அமித்ஷா எவ்வளவோ கூறினார். ஆனால், அதை எடப்பாடி பழனிசாமி ஏற்காததால் இத்தனை பிரச்சனைகள் நடந்திருக்கிறது. 2026 ஒன்றிணைந்தால்தான் அதிமுகவுக்கு வாழ்வு.. இல்லையென்றால் தாழ்வு. தினகரனின் அமமுக 14 லோக்சபா தொகுதிகளில் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது. இதனால், அவரை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளலாம் என அமித் ஷா சொன்னார். ஆனால், எடப்பாடி பழனிசாமி எதையுமே ஒப்புக்கொள்ளவில்லை.
அன்று எடப்பாடி சம்மதித்திருந்தால், இன்றைக்கு அதிமுக தான் ஆளுங்கட்சியாக இருந்திருக்கும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியடைந்துள்ளது. நாங்கள் நினைத்தால் எந்தக் கட்சியிலும் பதவி வாங்கிக்கொண்டு சென்றுவிடலாம். ஆனால், நாங்கள் உருவாக்கப்பட்ட கட்சியில் இருக்கவே விரும்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.