பகுதிநேர பொறியியல் பட்டப்படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் 2022-23ஆம் கல்வியாண்டிற்கு தகுதி வாய்ந்த பட்டயப்படிப்பு முடித்து, பணிபுரியும் விண்ணப்பதாரர்களுக்கு பகுதி நேர பொறியியல் பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”கோவை, நெல்லை, சேலம், பர்கூர் அரசு பொறியியல் கல்லூரிகள், காரைக்குடி அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் கல்லூரி, வேலூர் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் இன்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் விண்ணப்பிக்கலாம்.
பகுதி நேர பொறியியல் படிப்பில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் www.ptbe-tnea.com என்ற இணையதளம் மூலம் இன்று முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இணையதள வசதி இல்லாத விண்ணப்பதாரர்கள் பி.இ. படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவத்தை ஆன்லைன் வாயிலாக பதிவு செய்வதற்கு தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மையத்தில் செய்து கொள்ளலாம். மேலும், இந்த கல்வியாண்டிற்கான பகுதிநேர இளநிலை பொறியியல் பட்டப் படிப்பு கலந்தாய்வு ஆன்லைன் வாயிலாக மட்டுமே நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.