அங்கன்வாடி மையங்களில் செயல்படும் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளை தொடர்ந்து நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியதாவது; 2022-23- ம் கல்வி ஆண்டில் இருந்து அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி வளாகத்திற்குள் அமைந்துள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளை தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது. இந்த மையங்களில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளை கையாள இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணிபுரியும் தொடக்கக் கல்வி பட்டயப்படிப்பு பயிற்சி, தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த தன்னார்வலர்களை மழலையர் வகுப்புகள் இயங்கும் பள்ளியின் மேலாண்மைக்குழுவே தேர்ந்தெடுத்து தற்காலிக ஆசிரியராக நியமிக்கலாம்.
இல்லம் தேடிக் கல்வித்திட்டத்தில் தகுதி வாய்ந்த நபர் இல்லாதபோது தொடக்கக்கல்வி பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்ற பிற நபர்களை நியமனம் செய்யலாம். இவர்களது பணி முழுக்க முழுக்க தற்காலிகமானது. இச்சிறப்பாசிரியர்களுக்கு பிழைப்பூதியம் மேலாண்மைக்குழு மூலம் மாதம் தோறும் ரூ.5,000 சம்பளம் வழங்கலாம். பள்ளி மேலாண்மை குழுவின் செயல்பாடுகள் ஒருங்கிணைந்த இயக்கக நிர்வாகத்தின்கீழ் செயல்படுவதால் , இச்சிறப்பாசிரியர்களின் பணிக்காலம் ஆண்டிற்கு 11 மாதங்கள் என்பதால் இச்சிறப்பாசிரியர்களுக்கான பிழைப்பூதிய மொத்தச்செலவு ரூ.13.10 கோடியினை நிதியாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இத்தற்காலிக சிறப்பாசிரியர்களுக்கு ஒரு கல்வி ஆண்டிற்கு ஜூன் முதல் ஏப்ரல் வரை 11 மாதங்கள் மட்டுமே பணிக்காலமாகும் மற்றும் பள்ளியின் கடைசி வேலை நாளன்று விடுவிக்கப்படுவர். இந்த ஆசிரியர்கள் மழலையர் பள்ளிகளில் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை பணியாற்ற அனுமதி வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
