பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் அடுத்த தவணை நிதியை, மத்திய அரசு இந்த மாத இறுதியில் விடுவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிஎம் கிசான் திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு eKYC கட்டாயமாகும். பிரதமர் மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் 12-வது தவணைக்கான நிதியை பெற eKYC-யை 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2000 வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ. 6000 நிதியுதவி வழங்கப்படும். இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பரிமாற்றம் செய்யப்படும். இந்தத் திட்டத்தில் இதுவரை ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் நிதி உதவி, விவசாயக் குடும்பங்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், முதல் தவணை ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரையிலான காலத்திற்கு விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது, இரண்டாவது தவணை ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 வரையிலான காலகட்டத்திலும்.. மூன்றாவது தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரையிலான காலத்திற்குள் வரவு வைக்கப்படும். இதற்கு 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் உரிமை கொண்ட சிறு மற்றும் குறு விவசாய குடும்பங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் பயன்பெற நீங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.