தபால் வாக்கு செலுத்திய தவறியவர்கள் இன்று வாக்களிக்கலாம் என சென்னை தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய நியமிக்கப்பட்ட அலுவலர்கள் தபால் வாக்கு செலுத்த தவறி இருந்தால் அவர்களுக்கு இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி மையங்களில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தபால் வாக்கு செலுத்தாத அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்கள் 16 மையங்களுக்கு தகுந்த ஆவணங்கள் மற்றும் அடையாள அட்டையுடன் சென்று வாக்களிக்கலாம் மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 19ம் அன்று நடைபெறும் வாக்குப்பதிவு செய்ய என்னென்ன ஆவணங்கள் பயன்படுத்தலாம்…?
வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாத வாக்காளர்கள், அவர்களின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக, பின்வரும் மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பிக்க வேண்டும். அதன்படி ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை, வங்கி அல்லது அஞ்சலக கணக்குப் புத்தகங்கள் (புகைப்படத்துடன் கூடிய), தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை இருக்க வேண்டும்.
மேலும் நிரந்தர கணக்கு எண் அட்டை (PAN CARD), தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்தியத் தலைமைப் பதிவாளரால் வாங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, இந்திய கடவுச் சீட்டு புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய அல்லது மாநில அரசின் பொதுத் துறை நிறுவனங்களால்/ வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், பாராளுமன்ற/சட்டமன்ற/சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை, இந்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்படும் தனித்துவமான இயலாமைக்கான அடையாள அட்டை (UDID), ஏதேனும் ஒன்று இருந்தால் போதும்.
ஒரு வாக்காளர் வேறொரு சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருந்தார் என்றால் அந்த அடையாள அட்டையையும் இந்தியத் தேர்தல் ஆணையம் காட்டும் ஆவணமாகப் பயன்படுத்தலாம். ஆனால் அந்த வாக்காளருடைய பெயர் அந்த வாக்குச் சாவடிக்குரிய வாக்காளர் பட்டியல் இடம் பெற்றிருக்க வேண்டும். வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அல்லது இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட மேற்கூறிய எந்த ஒரு அடையாள ஆவணம் வைத்திருப்பதால் மட்டுமே ஒரு வாக்காளர் தனது வாக்கைச் செலுத்தி விட முடியாது.