நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதற்கு, அக்கட்சியின் பொருளாளரான பிரேமலதா விஜயகாந்த் பதில் அளித்துள்ளார்.
காவிரியில் தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து, தே.மு.தி.க சார்பில் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தை, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடங்கி வைத்தார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், ஒவ்வொரு ஆண்டும் காவிரி நீருக்காக கர்நாடகத்தை, தமிழகம் நாடி இருக்க வேண்டிய நிலை உள்ளது. இப்பிரச்சனை 55 ஆண்டுகளாக நீடிக்கிறது. ஆண்ட கட்சிகளும், ஆண்டு கொண்டிருக்கிற கட்சிகளும் இதற்கு நிரந்தரத் தீர்வைக்காண எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை.
காவிரி விவகாரத்தில், தமிழக அனைத்து கட்சி தலைவர்களுடன் பிரதமரை முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்க வேண்டும். அனைத்து நதிகளையும் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக – பாஜக கூட்டணி முறிந்துபோய் இரண்டு நாட்கள் தான் ஆகிறது. இரு கட்சிகளுக்கு இடையே எந்த பிரச்னை கிடையாது. இரு கட்சிகளின் தலைவர்களுக்கு இடையேதான் பிரச்னை.
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை. நிரந்தர எதிரியும் இல்லை. தேர்தலுக்கு 6 மாதங்கள் உள்ளன. எனவே நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி விஷயத்தில், நிச்சயம் ஒரு நல்ல தீர்வை தேமுதிக எடுக்கும். உரிய நேரத்தில் எங்களின் நிலைப்பாட்டினை விஜயகாந்த் நிச்சயம் அறிவிப்பார்” என்றார்.