நாகை மாவட்டம் கோகூர் கிராமத்தை சேர்ந்தவர் சரண்யா. இவர் கொராடச்சேரி பகுதியை சேர்ந்த முருகதாஸ் என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு கடந்த 7 ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லை.இந்த கஷ்டத்தில் இருந்த அவர்கள் பல்வேறு தனியார் மருத்துவமனைகளை அணுகினர். எந்த பலனும் அளிக்காத நிலையில் தனது தாயின் வீட்டிற்கு சென்று, நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தார்.
அங்கு சரண்யா கருவுற்று தொடர்ந்து நாகை அரசு மருத்துவமனையில் மருத்துவம் செய்து வந்துள்ளார். ஏமாற்றத்திற்கு பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த சரண்யாவிற்கு கடந்த ஏப்ரல் மாதம் 26-ஆம் தேதி குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. முறையான உருவமே இல்லாத நிலையில் 540 கிராம் எடையில் குறை மாதத்தில் பிறந்த குழந்தை பிறந்தது.
540 கிராம் எடையில் பிறந்த குழந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று முடிவெடுத்த நாகை அரசு மருத்துவர்கள் குழந்தையை இன்குபெட்டர் கருவியில் வைத்து சிகிச்சையை தொடங்கினர். மூச்சு திணறல், கிருமி தொற்று, ரத்த சோகை போன்ற பல்வேறு பிரச்னைகளால் இருந்த குழந்தையை தரமான சிகிச்சைஅளித்து வந்தனர் அரசு மருத்துவர்கள்.
செயற்கை சுவாசம் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் கொடுக்கப்பட்டு 30 நாட்களில் குழந்தையை மீட்ட மருத்துவர்கள் பின்னர் தாய்ப்பால் எடுத்து பாலாடை மூலம் குழந்தைகளுக்கு பாலூட்டி பின்னர் நேரடியாக தாய் பால் கொடுக்க பயிற்சி அளித்து 540 கிராமில் பிறந்த குழந்தையை ஒன்றரை கிலோ எடைக்கு கொண்டு வந்துள்ளனர். இன்று நடந்த தாய்ப்பால் வார நிறைவு விழாவில் பெற்றோர்களிடம் நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் மகிழ்ச்சியோடு குழந்தையை ஒப்படைத்தார். குழந்தையை போராடி காப்பாற்றி 100 நாட்களுக்கு பிறகு பெற்றோர்களிடம் ஒப்படைத்த நாகை அரசு மருத்துவர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.