திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை சிறப்பு நிலை பேரூராட்சியில் தூய்மை பணியாளராக காளிமுத்து என்பவர் பணியாற்றி வந்தார். சமீபத்தில் இவர் உயிரிழந்த பிறகு அவருடைய வேலை கருணையின் அடிப்படையில் அவருடைய மனைவிக்கு வழங்கப்பட்டது. அந்த விதத்தில் அந்த பெண் திசையன்விளை சிறப்பு பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார்.
அந்த பகுதியில் உள்ள பேரூராட்சி சுகாதார ஆய்வாளராக நவராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார் இவர் தூய்மை பணியாளரான அந்த பெண்ணுக்கு ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவு வழங்கியதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருநெல்வேலி காவல் துறை அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட அந்த பெண் மனு ஒன்றை வழங்கியிருந்தார்.
இந்த சூழ்நிலையில் தான் நேற்று முன்தினம் திசையன்விளை சிறப்பு பேரூராட்சியில் நவராஜ் மீது துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், அந்த அதிகாரி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் பேரூராட்சி அலுவலகத்தின் முன்பு தூய்மை பணியாளர்கள் 20க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.