குடிபோதையில் ரயில் டிக்கெட் பரிசோதகர் ஒருவர், பெண் பயணியின் தலையில் சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரயில்வே போலீஸை மேற்கோள்காட்டி ஏ.என்.ஐ. இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அகால் தக்த் எக்ஸ்பிரஸ் ரயில், அமிர்தசரஸிலிருந்து கொல்கத்தா நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு பெண், தனது கணவர் ராஜேஷ்குமாருடன் கொல்கத்தாவுக்கு செல்ல அந்த ரயிலின் ஏ-1 பெட்டியில் ஏறி தங்கள் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தனர். அமிர்தசரஸிலிருந்து கொல்கத்தா செல்லும் அந்த ரயிலில் முன்னா குமார் என்பவர் டிக்கெட் பரிசோதகராக இருந்தார். பீகார் மாநிலத்தை சேர்ந்த அவர், நல்ல குடிபோதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. நள்ளிரவில் அந்த டிக்கெட் பரிசோதகர், அந்த பெண்ணின் தலையில் சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது.
டிக்கெட் பரிசோதகரின் செயலை கண்டு அந்த பெண் கூச்சல் போடவே, அந்த ரயிலில் பயணம் செய்த மற்ற பயணிகள் விழித்துக் கொண்டனர். பின்னர் நடந்த விஷயத்தை அறிந்ததும் அவரை பிடித்து வைத்து கொண்டனர். இதையடுத்து, ரயில் லக்னெளவில் சார்பாக் ரயில்நிலையத்தை அடைந்ததும் அந்த டிக்கெட் பரிசோதகரை ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை நேற்று காலை நீதிமன்ற காவலில் வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.