மொரோக்கோ நாட்டின் மாரேஷ் என்ற பகுதியில் முதற்கட்டமாக இரவு 11.11 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானதாகவும் இந்த நிலநடுக்கம் மரகேஷிலிருந்து (Marrakech) தென்மேற்கே திசையில் 44 மைல் (71 கிலோமீட்டர்) தொலைவில் 18.5 கிலோமீட்டர் ஆழத்தில் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்பின்னர் மீண்டும் இன்று அதிகாலை 03.14 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மராகேச் என்ற இடத்தில் இருந்து 79 கி.மீ தூரத்தை மையமாக கொண்ட இந்த நிலநடுக்கம் ரிக்டேர் அளவுகோலில் 6.8 என்ற அளவில் பதிவாகி உள்ளது.
இந்த நிலநடுக்கம் சுமார் 20 நொடிகள் நீடித்ததாக கூறப்படுகிறது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகளால் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இடிபாடுகளில் பொதுமக்கள் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இடிபாடுகளில் மக்கள் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் மொராக்கோவில் நிலநடுக்க பாதிப்பால் உயிரிழந்தவர்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் மொராக்கோவிற்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் பதிவில், “மொராக்கோவில் நிலநடுக்கத்தால் உயிர் இழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில், எனது எண்ணங்கள் மொராக்கோ மக்களுடன் உள்ளன. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். இந்த கடினமான நேரத்தில் மொராக்கோவிற்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.