திருவள்ளூர் மாவட்டம், அத்திபட்டில், மின் வாரியத்திற்கு வட சென்னை என்ற பெயரில் அனல் மின் நிலையம் உள்ளது,அங்கு தலா, 210 மெகா வாட் திறனில் மூன்று அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இது, சென்னையின் மின் தேவையை பூர்த்தி செய்கிறது. ஆனால் இந்த அனல் மின் நிலையத்தில் அவ்வப்போது பழுது ஏற்படுவதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு வந்தது.

ஆனால் இதே வட சென்னை அனல் மின் நிலையம் தான் தற்போது புதிய சாதனையை படைத்துள்ளது. வடசென்னை அனல் மின் நிலையம் நிலை 1ல் இதுவரையில்லாத அளவில், 615 மெகாவாட்டாக மின் உற்பத்தி உச்சம் எட்டியது. இது குறித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படி செயல்படும் தமிழக மின்வாரியத்தின் சாதனைகளில் ஒரு மைல் கல்லாக, 07/12/2022 அன்று, வடசென்னை அனல் மின் நிலையம் நிலை 1ல் இதுவரையில்லாத அளவில், 615 மெகாவாட்டாக மின் உற்பத்தி உச்சம் எட்டியது” என குறிப்பிட்டுள்ளார்.