கால்நடை பண்ணை அமைக்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் ; கால்நடைகளின் எண்ணிக்கையை உயர்த்தவும் தொழில்முனைவோரை உருவாக்கவும் புதிய கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தில் நாட்டு கோழி பண்ணையுடன்கூடிய குஞ்சு பொரிப்பகம் அமைக்க ரூ. 25 லட்சம் வரையும், செம்மறி ஆடு, வெள்ளாடு பண்ணை அமைக்க ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையிலும், பன்றி வளர்ப்புப் பண்ணை அமைக்க ரூ.15 முதல் ரூ.30 லட்சம் வரையிலும் மானியம் வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் தனிநபர், சுய உதவிக் குழுக்கள், விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்பு, விவசாய கூட்டுறவு, கூட்டுப் பொறுப்பு சங்கங்கள், ஆகியன விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இதுகுறித்து முழுமையான விவரங்களை இணையதளத்தில் அறியலாம். மேலும், விவரங்களுக்கு கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை மருத்துவர்கள், மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்கள், அருகிலுள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன அலுவலர்கள், தமிழ்நாடு கால்நடை மேம்பாட்டு முகமை அலுவலர்கள் ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.