சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் ராஜசேகரன் என்பவர் கார்த்திகை செல்வி (வயது 35 ) என்ற மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு பால சத்தியா என்ற 10 வயது மகள் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த அக்டோபர் 11ஆம் தேதி கார்த்திகை செல்வி ரத்த காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டார். இது குறித்து, போலீசார் நடத்திய விசாரணையில், கணவர் ராஜசேகர் தான் கொலை செய்தது தெரியவந்துள்ளது.
எனவே தலைமறைவாகி இருந்த அவரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். போலீசார் கைது செய்து அவரிடம் விசாரித்த நிலையில், ராஜசேகரன் தனியார் ஷோரூம் ஒன்றில் செக்யூரிட்டி வேலை செய்து வந்துள்ளார். கார்த்திகை செல்வி வீட்டில் இருந்தவாறு தையல் தொழில் செய்து சம்பாதித்து வந்துள்ளார்.
வீட்டில் பண பிரச்சினை ஏற்பட்டதால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது. ராஜசேகரன் குடித்துவிட்டு சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் அழித்து வந்துள்ளார். இதை செல்வி தட்டி கேட்டுள்ளார்.
அப்போது தகாத வார்த்தை சொல்லி கணவனை திட்டியவுடன் ஆத்திரமடைந்த ராஜசேகரன் மனைவியை ரீப்பர் கட்டையை எடுத்து மண்டையில் அடித்து கொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அங்கிருந்து ராஜசேகரன் தப்பியோடி விட்டதாக தெரிவித்துள்ளார்.