ஆதார் மூலம் பணத்தை திருடுவது உள்ளிட்ட மோசடிகளை தவிர்க்க அதன் பயன்பாட்டு வரலாற்றை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என மத்திய அரசும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் ஆதார் மூலம் பணத்தை திருடும் கும்பல் அதிகரித்து வருவதாக ஆதார் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உங்களது வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக பொய் சொல்லி மோசடிக்காரர்கள் ஒரு லிங்கை அனுப்புவார்கள். அதில் உங்களது ஆதார் எண்ணை உள்ளிடும்போது அதனை வைத்து மோசடி நடைபெறுகிறது. உங்களது ஆதார் எண்ணை கேட்டு வரும் மெயில் மற்றும் எஸ்எம்எஸ்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற மோசடிகளைத் தவிர்க்க, மக்கள் தங்கள் ஆதார் அட்டையை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. அட்டையில் உள்ள QR குறியீட்டைப் பயன்படுத்தி மக்கள் தங்கள் ஆதாரை சரிபார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது. கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து Aadhaar செயலியைப் பதிவிறக்கவும். செயலியை திறந்து, ஆதார் சரிபார்க்கவும் என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும். ஆதார் அட்டை, இ-ஆதார் அல்லது ஆதார் பிவிசியில் உள்ள QR குறியீட்டில் உங்கள் மொபைலின் கேமராவை ஸ்கேன் செய்யவும். QR குறியீடு ஸ்கேன் செய்யப்பட்டு ஆதார் வைத்திருப்பவரின் விவரங்கள் காட்டப்படும். தகவலைச் சரிபார்த்து, சரிபார்க்கவும் என்ற பொத்தானைத் தட்டவும்.
தகவல்கள் சரியாக இருந்தால் சரி. ஆனால் உங்கள் ஆதாரில் மாற்றங்கள் இருப்பது போல் உணர்ந்தால் நீங்கள் உடனடியாக UIDAI-க்கு தெரிவிக்க வேண்டும். அவர்களின் ஹெல்ப்லைன் 1947ஐ அழைப்பதன் மூலமோ அல்லது uidai.gov.in இல் ஆன்லைனில் புகாரைப் பதிவு செய்வதன் மூலமோ இதைச் செய்யலாம்.