கோடைக்காலத்தில் வெயிலினால் ஏற்படும் உடல் சூட்டு நோய்களில் இருந்து பாதுகாக்க கருப்பட்டி பெரிதும் உதவுகிறது. இதன் நன்மைகள் என்ன அதனை பயன்படுத்தும் முறைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
அந்தகாலத்தில் கருப்பட்டியில் தான் தேனீர் தயாரித்து அருந்துவார்கள். இதுமாதிரி நம் முன்னோர்கள் ஆரோக்கியமான உணவு பழக்கங்களை மேற்கொண்டு வந்ததால்தான் நீண்ட ஆயுளுடன் நோய் நொடியின்றி வாழ்ந்து வந்தனர். ஆனால், இதன் நன்மைகள் தெரியாமல் இன்றைய தலைமுறையினரால் காலப்போக்கில் கருப்பட்டியின் பயன்பாடு குறைந்தே வருகிறது. அந்தவகையில் கருப்பட்டியில் உள்ள நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
கருப்பட்டியில் இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் ஏ, பாஸ்பரஸ், ஃபோலிக் ஆசிட் போன்ற சத்துக்கள் மிகுந்து காணப்படுகின்றன. கருப்பட்டியை சாப்பிட்டால் நம் உடலில் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் சீரான நிலையில் இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சீரகம் அல்லது சோம்பு சேர்த்த நீரை கருப்பட்டி சேர்த்து குடிக்கலாம். கோடைகாலத்தில் இப்படி குடிப்பது உடலை நீரேற்றமாக வைத்திருக்கும். உடல் சூட்டினால் வரும் நோய்கள் உங்களை அண்டாது.
சூடான பாலில் பனங்கற்கண்டு, பொடித்த மிளகு, மஞ்சள் தூள் ஆகியவை கலந்து குடித்தால் தொண்டைப்புண் சரியாகும். சிலருக்கு மூலநோய் அவஸ்தை இருக்கும். அவர்கள் இதனை பின்பற்றலாம். கருப்பட்டிக்கு வயிற்று புண்களை ஆற்றும் சக்தி உண்டு. வாயு தொல்லையால் அவதிப்படுபவர்கள் ஓமத்துடன் கருப்பட்டியை சாப்பிட வேண்டும். நல்ல தீர்வு கிடைக்கும். கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்க கருப்பட்டியை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். பருவம் எய்திய பெண்கள் உளுந்த மாவுடன், கருப்பட்டி சேர்த்து உளுந்தங்களி சாப்பிட்டால் இடுப்பு எலும்புகள், கருப்பை வலுவாகும். ரத்தப்போக்கு சீராக இருக்கும்.