நேற்று சென்னை சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர்,“நான் படித்த பள்ளிக்கு போகப்போகிறேன் என்று நேற்றிரவு முதலே மகிழ்ச்சியில் இருந்தேன் தூக்கம் வரவில்லை, வழக்கமாக 2-3 மணிக்குதான் தூங்குவேன், அந்த தூக்கமும் நேற்று வரவில்லை. மாணவப் பருவம் என்பது திரும்ப கிடைக்காத காலம்.
இங்க இருக்கும் சில முகங்களை பார்க்கும்போது குறிப்பாக என்னுடைய தமிழ் ஆசிரியர் ஜெயராமனை பார்க்கும்போது “நியாபகம் வருதே நியாபகம் வருதே” பாட்டு தான் நியாபத்துக்கு வருது அத பாடணும்னு ஆசை. ஒரு பள்ளியில் இருந்து எத்தனையோ டாக்டர்கள், வக்கீல்கள், என்ஜினீயர்கள் போன்றோர்களை உருவாக்கி இருப்பார்கள், ஆனால் முதலமைச்சரை உருவாக்கிய பெருமையை இந்த பள்ளிக்கு நான் சேர்த்திருக்கேன் என்றால் அதில் எனக்கும் பெருமை.
இந்த பள்ளியில் நான் படித்தபோது எனது தந்தை கலைஞர் கருணாநிதி, போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். பள்ளியில் அமைச்சரின் மகன் என்று நான் காட்டிக்கொள்வதை எனது தந்தை விரும்பமாட்டார். படிக்கும்போது நான் அமைச்சரின் மகனாக நடந்துகொண்டதில்லை. இது என்னுடன் படித்த உங்கள் அனைவருக்கும் தெரியும். கோபாலபுரத்தில் உள்ள எனது இல்லத்திலிருந்து ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வரை நடந்து வந்து 29c பேருந்திலும், சில நேரம் சைக்கிளிலும் பள்ளிக்கு வந்துள்ளேன். பேருந்திலிருந்து இறங்கி ஸ்டெர்லிங் சாலையில் இருந்து பள்ளிக் கூடம் வரை நடந்தே வருவேன்.
நான் அரசியலுக்கு வருவேன் என்றோ, ஒரு கட்சியின் தலைவராக, ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக வருவேன் என்றோ நினைத்துப் பார்த்ததில்லை. நீங்களும் நினைத்திருக்க மாட்டீர்கள்.ஆனால் அது தற்போது நடந்துள்ளது. பள்ளியில் அடி வாங்கியது, பென்சில் வாங்கியது, விளையாடியது குறித்து பலமுறை இங்கு வந்தபோது நினைவில் வந்துள்ளது. இப்படி ஒரு உயர்ந்த இடத்திற்கு நான் வந்ததற்கு இந்த பள்ளியும் ஒரு முக்கிய காரணம் என்பதை எண்ணி நான் பெருமைப்படுகிறேன்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியாக உரையாற்றினார்.