நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஞானசேகரன் அக்கட்சியில் இருந்து அதிரடியாக விலகியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பலரும் சீமான் மீது அதிருப்தி தெரிவித்து அக்கட்சியை விட்டு அடுத்தடுத்து விலகி வருகின்றனர். விலகியவர்கள் திமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது, நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஞானசேகரன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2010இல் நாம் தமிழர் கட்சியாகத் துவங்கப்பட்ட காலத்திலிருந்து முழு அர்ப்பணிப்போடு செயலாற்றி உள்ளேன். ஆனால், சமீப காலமாக கட்சியின் போக்கில் பல மாற்றங்களும், கொள்கைக்கு முரணான காட்சிகளும் அரங்கேறி வருகிறது. சாதியை ஒழிக்கும், ஜனநாயக அமைப்பாக நாம் தமிழர் கட்சி இருக்கும் என்று நினைத்தேன்.
ஆனால், சாதியைத் திணிக்கும் சர்வாதிகார அமைப்பாக, நாம் தமிழர் கட்சியை சீமான் கொண்டு செல்கிறார். மேலும், சாதி பார்த்து கட்சியில் வேட்பாளர்களை நிறூத்துகிறார்கள். இதுகுறித்து கேள்வி கேட்டால், கட்சியை விட்டு நீக்குவது அல்லது வேறு ஏதாவது பொறுப்பில் அமர்த்துவது போன்ற மோசமான செயல்களை செய்கின்றனர். எனவே, சங்பரிவார் அமைப்புகளோடு கைகோர்த்துக்கொண்டு சங்கிகள் சூழ்ச்சிக்கு தமிழர்களை இறையாக்கும் உங்களோடு இனி என்னால் பயணிக்க முடியாது. இதனால், நான் வகித்து வந்த மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகுகிறேன்” என தெரிவித்துள்ளார்.