காவல்துறை அதிகாரியை தாக்கியதாக சொல்லப்படும் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சீமான் வீட்டு காவலாளிகள் அமல்ராஜ், சுபாகர் ஆகிய இருவரையும் மார்ச் 13ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சோழிங்கநல்லூர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் உத்தரவு.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக, நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், அடுத்த சில நாட்களில், விஜயலட்சுமி அந்த புகாரைத் திரும்பப் பெற்றார். மீண்டும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வளசரவாக்கம் காவல் நிலையத்தில், நடிகை விஜயலட்சுமி, திருமணம் செய்து கொள்வதாக கூறி சீமான் தன்னை ஏமாற்றியதாகவும், 6 முறை கருக்கலைப்பு செய்ததாகவும் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 12 வாரங்களில் வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தது. இதனிடையே, பாலவாக்கத்தில் உள்ள சீமான் இல்லத்துக்குச் சென்ற வளசரவாக்கம் போலீஸார், சீமான் வீட்டில் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி நேற்று சம்மன் ஒட்டினர். அப்போது அங்கிருந்த கட்சி நிர்வாகி சம்மனை கிழித்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், சீமான் வீட்டுக்குள் செல்ல முயன்ற காவல்துறையினரை அங்கிருந்த காவலாளி அமல்ராஜ் என்பவர் தடுத்து நிறுத்தினார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, காவலர்களை அமல்ராஜ் தாக்கியதாகவும், அவரிடமிருந்த துப்பாக்கியை போலீஸார் கேட்டதற்கு மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதை எடுத்து இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் காவல்துறை அதிகாரியை தாக்கியதாக சொல்லப்படும் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சீமான் வீட்டு காவலாளிகள் அமல்ராஜ், சுபாகர் ஆகிய இருவரையும் மார்ச் 13ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சோழிங்கநல்லூர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.