அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் துப்புரவாளர், இரவுக் காவலர் பதவி இரண்டையும் சேர்த்து 10 ஆண்டுகள் பணி முடித்துள்ள பணியாளர்களுக்கு தேர்வுநிலை வழங்கலாம் என பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் ராஜேந்திரன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியதாவது ; அரசு உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் அடிப்படைப் பணியாளர்களான துப்புரவாளர், இரவுக் காவலர் இரண்டையும் சேர்த்து 10 ஆண்டுகள் பணி முடித்துள்ளவர்ளுக்கு தேர்வுநிலை வழங்குவதற்கு தெளிவுரை கோரப்பட்டுள்ளது.
அதன்படி துப்புரவாளர், இரவுக் காவலர்களுக்கு தேர்வுநிலை வழங்குவது சார்ந்து ஏற்கனவே நடைமுறையில் உள்ள அரசாணைகள் மற்றும் அரசு விதிகளின்படி தேர்வுநிலை வழங்குமாறும். இது சார்ந்து இவ்வியக்ககத்திற்கு அடிக்கடி தெளிவுரைகள் கேட்டு கடிதங்கள் அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.
மேலும் இப்பொருள் சார்ந்து காலதாமதமின்றி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காலதாமதம் ஏற்பட்டால் சார்ந்த அலுவலர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.