செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை சார்பில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது தரப்பு வாதங்களை எடுத்து வைக்க உள்ளனர்.
அமலாக்கத் துறை அதிகாரிகளால் செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் நிஷா பானு, பாரத சக்கரவர்த்தி ஆகியோர் விசாரித்தனர்.
விசாரணையில் இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதை அடுத்து வழக்கு 3-வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. கடந்த வாரம் சனிக்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, நீதிபதி வாதங்களை முன்வைப்பதில் சிரமம் உள்ளதாக தெரிவித்தார். இதை எடுத்து விசாரணை ஜூலை 11 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நேற்று மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், வழக்கறிஞர் இளங்கோ ஆஜரானார். கைதுக்கான ஆவணங்களை அமலாக்கத்துறை வழங்கியது அதனை செந்தில் பாலாஜி ஏன் வாங்க மறுத்தார்..? என நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதை அடுத்து வழக்கு விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டது. இன்று அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது தரப்பு வாதங்கள் நீதிமன்றத்தில் முன் வைக்க உள்ளார். அதனை தொடர்ந்து மூன்றாவது நீதிபதி செந்தில் பாலாஜி வழக்கில் தீர்ப்பு வழங்க உள்ளார்.