கணவர் கல்வி விடுப்பு எடுத்தாலும், பிரிந்த மனைவி மற்றும் குழந்தைக்கு பராமரிப்பு கொடுப்பதில் இருந்து விலக்கு இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு நபர் ஒருவர் மனுதாக்கல் செய்திருந்தார். அதேநேரத்தில் பிரிந்த மனைவி தனக்கும் மைனர் மகளுக்கும் மாதந்தோறும் தலா ரூ.1,00,000 இடைக்காலப் பராமரிப்பு தொகை(ஜீவனாம்ச) வழங்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம், சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் ஒட்டுமொத்த விளைவைக் கருத்தில் கொண்டு, இடைக்காலப் பராமரிப்பாக மனைவி மற்றும் மகளுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ25,000 வழங்க உத்தரவிட்டது.
குடும்பநல நீதிமன்றம் வழங்கிய உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்ரமணியன் மற்றும் நீதிபதி ஆர்.கலைமதி ஆகியோர் அடங்கிய அமர்வு, அந்த நபர், பிஎச்.டி., படிப்பிற்கு ஓய்வு எடுத்துவிட்டு, பகுதி நேர வேலையில் ஈடுபட்டு, மாதம் ரூ.20,000 ஊதியம் பெறும் என்னால் எப்படி பராமரிப்பு தொகை மாதம் 25,000 செலுத்தமுடியும் என்றும் குடும்ப நல நீதிமன்ற உத்தரவுப்படி பராமரிப்பு தொகை செலுத்த முடியவில்லை என்று வாதிட்டார்.
இருப்பினும், குடும்ப நீதிபதி வழங்கிய ஜீவனாம்ச உத்தரவை நியாயமானதாக இருப்பதாக கூறி உயர் நீதிமன்றம் அதில் தலையிட மறுத்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், கணவர் தனது மனைவி மற்றும் அவரது மகளின் பராமரிப்புக்காக தலா ₹12,500 செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், குடும்ப நீதிமன்றத்தால் வழங்க வேண்டும் என்று கூறிய பராமரிப்புதொகை, இன்றைய வாழ்க்கைச் செலவில் ஒரு மனிதனின் வாழ்வாதாரத்திற்கு போதுமானது என்று குறிப்பிட்டது.