இந்த கல்வியாண்டிற்கான காலாண்டுத் தேர்வு, செப்டம்பர் 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 11, 12 ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 15 ஆம் தேதி தேர்வு தொடங்கியது, 6 முதல் 10ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 18 ஆம் தேதியும் காலாண்டு தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 27-ஆம் தேதி தேர்வுகள் நிறைவடைந்த பின், 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்படுகிறது. இந்த நிலையில் காலாண்டுத் தேர்வு விடுமுறையில் ஏழு நாட்கள் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் (NSS Camp) நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்க கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, சுயநிதி பள்ளி, தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் நலப்பணித்திட்ட அமைவின் 2023-2024 கல்வி ஆண்டிற்கான சிறப்பு முகாமினை எதிர்வரும் காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் ஏழு நாட்கள் நடத்திட வேண்டும்.
அதற்கான உரிய திட்டமிடலை மேற்கொள்ள நாட்டு நலத்திட்ட பணி மாவட்ட தொடர்பு அலுவலருக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுரைகள் வழங்க வேண்டும். மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையில் குழு அமைத்து தங்கள் மாவட்டத்தில் நாட்டு நல பணித்திட்டம் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளின் சார்பாகவும், சிறப்பு முகாம் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.