பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடும் யாராக இருந்தாலும், அவர்கள் மீது எந்த வித பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..
கடலூரில் பாலியல் புகாரில் திமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்டது குறித்து எதிர்க்கட்சிதலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.. இந்த தீர்மானத்தின் மீது பதிலளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் “ கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் சக்திநகரில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் யுகேஜி படித்து வரும் 6 வயது சிறுமி, நேற்று பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற பின்னர் தனக்கு வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.. இதையடுத்து அந்த சிறுமியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்த போது அச்சிறுமி பாலியல் துன்புறத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.. இதை தொடர்ந்து அந்த சிறுமி விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்..
இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாயார், காவல்நிலையத்தில் புகாரளித்திருந்தார்.. அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டதன் அடிப்படையில் அப்பள்ளியின் தாளாளரும், ஓய்வுபெற்ற ஆசிரியருமான பக்கிரிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை மேற்கொண்டு பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க நான் உத்தரவிட்டுள்ளேன்.. குற்றம்சாட்டப்பட்டுள்ள பக்கிரிசாமி, விருத்தாச்சலம் நகர்மன்றத்தின் 30-வது வார்டு உறுப்பினராக உள்ளார் என்று அறிந்த உடனேயே, அவர் திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார்.. இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
நான் செய்தியை கேள்விப்படவில்லை.. தொலைக்காட்சியில் தான் பார்த்தேன் என்று சொல்ல நான் தயாராக இல்லை.. இந்த செய்தியை அறிந்த உடனேயே, சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் குற்றவாளி கைது செய்யப்பட்டார். இந்த அரசை பொறுத்தவரைக்கும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மனித குலத்திற்கே அவமானம் என்று கருதுகிறோம்… அந்த வகையில் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் யாராக இருந்தாலும், அவர்கள் மீது எந்த வித பாரபட்சமின்றி துரித நடவடிக்கை எடுப்போம்..” என்று தெரிவித்தார்.