அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த இளம்பெண் இளைஞரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் கார்டெரெட் பகுதியில் வசித்து வந்தவர் 29 வயது ஜஸ்வீர் கவுர். பஞ்சாப் மாநிலத்தில் வசித்து வரும் ஜஸ்வீர், கார்டெரெட் பகுதியில் உள்ள அமேசான் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவரது கணவர் லாரி டிரைவராக வேலை பார்க்கிறார். இவருடைய வீட்டுக்கு 20 வயதான உறவுக்கார பெண் ககன்தீப் கவுர் வந்துள்ளார். அந்த சமயத்தில் 19 வயதான ஒருவர், ககன்தீப் கவுரை வீட்டிற்கு வெளியே சந்தித்து பேசியுள்ளார். சிறிது நேரத்தில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ககன்தீப் கவுர், உதவிக்கு ஜஸ்வீர் கவுரை அழைத்து வந்த போது ககன்தீப் கவுருக்கு ஆதரவாக பேசியுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் ஜஸ்வீர் கவுரை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார். பிறகு ககன்தீப் கவுரையும் சுட்டுள்ளார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ஜஸ்வீர் கவுர் உயிரிழந்தார். ககன்தீப்கவுருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த விசாரணையில், அவர் வாஷிங்டனின் கென்ட் நகரில் வசித்து வரும் கவுரவ் கில் (19) என்பதும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். மாணவர் விசாவில் அமெரிக்காவுக்கு படிக்க வந்த ககன்தீப் கவுர், சமீபத்தில் தனக்கு படிப்பில் சிக்கல் இருப்பதாக ஜஸ்வீர் கவுரிடம் கூறியிருக்கிறார். அவருக்கும் கவுரவ் கில்லுக்கும் என்ன தொடர்பு? ஏன் இருவருக்கிடையே சண்டை ஏற்பட்டது? என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : தமிழ்நாட்டில் மீண்டும் அதிர்ச்சி..!! கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் பலி..!!