திருச்சியை அடுத்துள்ள ஸ்ரீரங்கத்தில் இயங்கி வரும் தொண்டு நிறுவனம் ஒன்றில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டுள்ள அடுத்தடுத்த குழந்தைகளின் மரணம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சிக்கு அருகே உள்ள ஸ்ரீரங்கத்தின் மாம்பழச் சாலையில் இயங்கி வரும் தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான குழந்தைகள் காப்பகத்தில் 15 குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன இந்த காப்பகத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்த ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தினர். தடுப்பூசி செலுத்தியதிலிருந்து எட்டு குழந்தைகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். சிகிச்சையிலிருந்து திரும்பிய மூன்று குழந்தைகள் காப்பகத்திற்கு வந்த நிலையில் இன்று உயிரிழந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் ஒவ்வாமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டினால் அந்த குழந்தைகள் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஒரே காப்பகத்தைச் சார்ந்த மூன்று குழந்தைகள் ஒரே நாளில் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.