நடிகர் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஜெய் பீம் படத்தின் இயக்குநர் ஞானவேல் இப்படத்தை இயக்குவதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தை லைகா லைகா நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிவடைந்தது. நிச்சயம் இந்தப் படம் ரஜினியின் கரியரில் தரமான சம்பவமாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தான், வேட்டையன் படத்தின் ஆடியோ வெளியீடு விழா நேற்றைய தினம் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், இயக்குனர் ஞானவேல் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். எப்படியும் இந்த இசை வெளியீட்டு விழாவில் ரஜினியின் பேச்சு கண்டிப்பாக ரசிக்கும்படியாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அதன்படியே, அவர் பல விஷயங்களை மேடையில் பேசினார்.
அந்த வகையில், இவ்விழாவில் பேசிய அவர், ”சகுனிகள் இருக்கின்ற இந்தச் சமுதாயத்தில் நல்லவனாக இருந்தால், பிழைத்துக்கொள்ள முடியாது. கொஞ்சம் சாணக்கியத்தனமும், சாமர்த்தியமும் வேண்டும்” என்று குறிப்பிட்டார். இதனைப் பார்த்த ரசிகர்கள் ரஜினிகாந்த் யாரை சகுனிகள் என்று சொல்கிறார். தனது தனிப்பட்ட பிரச்சனையை மையப்படுத்தி இப்படி சொல்கிறாரா? இல்லை சினிமாவில் அவருக்கு பிரச்சனை ஏற்படுத்துபவர்களை பற்றி இப்படி சொல்கிறாரா? என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.