எல்லைதாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி பறிமுதல் செய்து, இலங்கை அரசால் நாட்டுடைமையாக்கப்பட்ட 67 படகுகளை ஏலம் விட முடிவு செய்துள்ளதால், தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ராமேஸ்வரம், புதுச்சேரி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர், புதுச்சேரி முதல்வர் கடிதம் எழுதுவதும் தொடர் கதையாகி வருகிறது.
இந்ந நிலையில் 2020-ம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் ஏலம் விடப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட தமிழக, புதுச்சேரி மீனவர்களின் படகுகளை 2-வது முறையாக ஏலம் விடப்போவதாக இலங்கை அரசு தற்போது அறிவித்துள்ளது. அதன்படி, ராமேசுவரம் மீனவர்களின் 31 படகுகள், புதுக்கோட்டை மீனவர்களின் 14 படகுகள், கன்னியாகுமரி மீனவர்களின் 8 படகுகள், நாகை மீனவர்களின் 3 படகுகள், காரைக்கால் மீனவர்களின் 5 படகுகள் என மொத்தம் 67 படகுகளை ஏலம் விட உள்ளதாக இலங்கை நீரியல் வளத் துறை தெரிவித்துள்ளது.