பெரும்பாலான சாலை விபத்துக்கள் மது குடித்துவிட்டு வாகனங்களை இயக்குவதால் ஏற்படுகிறது. எனவே, அதனை தடுக்கும் வகையில் போக்குவரத்து காவல்துறை தற்போது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஏற்கனவே மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் அபராதத் தொகையாக ரூ.10,000 வசூலிக்கப்பட்டு வருகிறது. போதை நபர்களுடன் வாகனங்களில் பயணிப்பவர்கள் போதையில் இருந்தால், அவர்களும் ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என்ற விதிமுறை தற்போது கடைபிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், அபராதத் தொகை கட்டாதவர்களின் வாகனங்களோ அல்லது இதர வாகனங்களோ அல்லது வீட்டில் உள்ள அசையும் சொத்துக்களோ நீதிமன்றங்கள் வாயிலாக பறிமுதல் செய்யப்படும், என்று போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஏனென்றால் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டாலும் அவர்கள் முறையாக கட்டுவதில்லை என்பதால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை காரணமாக கடந்த ஒரே மாதத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபர்களிடம் இருந்து ரூ.3.5 கோடி அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.