2025-2026-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மாணவர்களை அரசு பள்ளிகளை நோக்கி ஈர்க்கும் வகையில் 2025-2026-ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை மார்ச் 1 முதல் தொடங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. 5 வயது பூர்த்தி அடைந்த மற்றும் பள்ளி குழந்தைகள் அனைவரையும் அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; 2025-26-ம் கல்வியாண்டில் 5 வயது பூர்த்தியடைந்த மற்றும் பள்ளி வயது குழந்தைகள் அனைவரையும் இன்று முதல் அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டங்கள் நடத்தி, அதில் உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களையும் பங்கு பெறச் செய்து, அரசு ஆசிரியர்கள் அனைவரையும் கொண்டு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்.
பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை சிறப்பு முகாம் அடிப்படையில் கோடை விடுமுறைக்கு முன்பே மேற்கொள்ள, அனைத்து ஆசிரியர்களுக்கும் பொறுப்புக்களை பிரித்து வழங்கி, சேர்க்கையை அதிகரித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.