மாணவிகள் அனைவரும் ஆபத்துக் காலங்களில் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ள உதவும் ‘காவல் உதவி’ (Kaaval Uthavi) செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவுரை வழங்கியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவர் தன்னுடைய ஆண் நண்பருடன் கல்லூரி வளாகத்தில் 23-ம் தேதி இரவு சுமார் 08.00 மணியளவில் தனியாக ஒரு கட்டிடத்திற்கு பின்னால் பேசிக்கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவர்களை அச்சுறுத்தியதாகவும், அதே நபர் தன்னை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாகவும், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையிலே ஞானசேகரன் என்பவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
தொடர்ந்து அதிகரித்து வரும் பாலியல் குற்ற சம்பவங்கள் பெண்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவிகள் அனைவரும் ஆபத்துக் காலங்களில் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ள உதவும் ‘காவல் உதவி’ (Kaaval Uthavi) செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவுரை வழங்கியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்; பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஆபத்துக் காலங்களில் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ள உதவும் ‘காவல் உதவி’ (Kaaval Uthavi) செயலியை அனைத்துப் பெண்களும், குறிப்பாக மாணவிகள் தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
அவசர காலங்களில் சிவப்பு நிற `அவசரம்’ என்ற பொத்தானை அழுத்துவதன் மூலமாக, பயனாளர் விவரம், தற்போதைய இருப்பிட விவரம் மற்றும் வீடியோ, கட்டுப்பாட்டு அறையில் பெறப்பட்டு காவல்துறையின் அவசர சேவை வழங்கப்படும். மாணவிகள் காவல் உதவி செயலியை தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்வதை, அனைத்துக் கல்லூரிகளும் உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இச்செயலியை Google Play Store, App Store-இல் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.