திருச்சியில் அரசு நலத்திட்ட விழாவில் திமுக வார்டு கவுன்சிலரை அமைச்சர் கே.என்.நேரு தலையில் ஓங்கி அடித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் ச.கண்ணணூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.3.46 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ள வாரச்சந்தை மேம்பாட்டு பணிகளுக்கு அமைச்சர் கே.என். நேரு அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து, திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பெரிய மிளகு பாறை பகுதியில் ரூ.95 லட்சம் மதிப்பிலான புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். அப்போது, அங்கு வந்த பெண்களுக்கு குடம் பரிசாக வழங்கப்பட்டது. ஒவ்வொரு குடமாக எடுத்து பெண்களுக்கு அமைச்சர் கே.என். நேரு விநியோகம் செய்து வந்தார். அப்போது, திடீரென குடங்களை எடுத்து கொடுத்துக் கொண்டிருந்த திமுக வார்டு கவுன்சிலரின் தலையில் அமைச்சர் ஓங்கி அடித்தார். இது தொடர்பான வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த சம்பவத்திற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள முன்னாள் பாஜக பிரமுகர் காயத்ரி ரகுராம், ‘திமுக தொண்டர்களுக்கு கொடுக்கும் மோசமான அவமரியாதை’, எனக் குறிப்பிட்டுள்ளார். அண்மையில், மனு கொடுக்க வந்த பெண்ணின் தலையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அடித்த சம்பவம் பெரும் விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.