இசைஞானி இளையராஜா வரும் 8-ம் தேதி லண்டனில் தனது முதல் சிம்பொனியை அரங்கேற்ற இருக்கும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளையராஜாவின் வீட்டுக்குச் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில், “இசைஞானி இளையராஜாவுடன் இன்றைய காலைப் பொழுது.. ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8 அன்று இலண்டன் மாநகரில் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தவுள்ளார் நம் மனதிற்கினிய ராஜா அவர்கள். தமிழ்நாட்டின் பெருமிதமான இசைஞானியின் இச்சாதனை முயற்சியை வாழ்த்துவதற்காக இன்று நேரில் சென்றேன்.
அப்போது, தாம் கைப்பட எழுதிய Valiant symphony இசைக்குறிப்புகளை உற்சாகத்துடன் என்னிடம் காட்டி மகிழ்ந்தார். உலகத் தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த இசைமூச்சான இளையராஜா அவர்களின் கணக்கற்ற சாதனைகளில் இந்தச் சாதனை ஒரு மணிமகுடமெனத் திகழ வாழ்த்துகிறேன்!” என பதிவிட்டிருந்தார்.
நான்கு தசாப்தங்களுக்கு மேல் திரைத்துறையில் பணியாற்றி வரும் இளையராஜா, தற்போது 35 நாட்களில் ஒரு முழு சிம்பொனியை உருவாக்கி முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வரும் 8 ஆம் தேதி இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் இளையராஜாவின் முதல் நேரடி சிம்பொனி இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் லண்டனில் நேரடி சிம்பொனி நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி முதல்வர் ஸ்டாலின் இளையராஜாவின் வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Read more:பிரசாந்த் கிஷோரை சாடும் புஸ்ஸி ஆனந்த்..? தவெக வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..