மாவட்ட அளவிலான மிதிவண்டி போட்டிகளில் பங்கேற்க பதிவு செய்யலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி பிரிவு சார்பாக தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 15ம் நாளினை சிறப்பிக்கும் பொருட்டு மாவட்ட அளவிலான பேரறிஞர் அண்ணா விரைவு மிதிவண்டி போட்டிகள் 14.10.2023 அன்று காலை 7.00 மணிக்கு ஸ்ரீ விஜய் வித்யாலயா ஆண்கள் மெட்ரிக் பள்ளி பேருந்து நிறுத்தத்திலிருந்து தொடங்கப்படவுள்ளது.
01.01.2011க்கு பின்னர் பிறந்த 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15கி.மீ. மாணவிகளுக்கு 10கி.மீ, 01.01.2009க்கு பின்னர் பிறந்த 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20கி.மீ, மாணவிகளுக்கு 15கி.மீ. 01.01.2007க்கு பின்னர் பிறந்த 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20கி.மீ, மாணவிகளுக்கு 15கி.மீ. தொலைவும் மிதிவண்டி போட்டி நடைபெறும்.
மாவட்ட அளவிலான மிதிவண்டி போட்டிகளில் முதல் 3 இடங்களில் வெற்றி பெறும் வீரர் வீராங்கனைகளுக்கு முறையே தலா ரூ.5000, ரூ.3000 ரூ.2000.., 4 முதல் 10 இடங்களைப் பெறும் வீரர் வீராங்கனைகளுக்கு தலா ரூ.250/- வீதம் காசோலையாகவோ அல்லது வங்கி மாற்று வழி மூலமாகவோ வழங்கப்படும் எக்காரணம் கொண்டும் ரொக்கமாக வழங்கப்பட மாட்டாது. மேலும் சான்றிதழ்கள் வழங்கப்படும். போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ மாணவிகள் பள்ளித் தலைமையாசிரியர் கையொப்பமிட்ட வயது சான்றுடன் 13.10.2023 அன்றுக்குள் மாவட்ட விளையாட்டரங்கம், தருமபுரியில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மாவட்ட அளவிலான போட்டியில் சாதாரண கைப்பிடி (ஹேண்டில் பார்) கொண்ட, இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் பொருத்தாத, இந்தியாவில் தயாரான மிதிவண்டியை மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படும். எனவே தருமபுரி மாவட்டத்திலுள்ள 13, 15 மற்றும் 17 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி மாவட்ட அளவிலான பேரறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டிகளில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.