தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவன விதிகள் (TNSE), விதி 18 (அபராதம்)-ன் கீழ் தமிழில் பெயர் பலகை வைக்கப்படவில்லையெனில் ரூ.2000/-அபராதத் தொகை விதிக்கப்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசால் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் பெயர் பலகைகளை தமிழில் அமைப்பது குறித்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947 மற்றும் விதிகள் 1948-இல் விதி 15-ன் படி, பெயர் பலகை தமிழில் வைக்கப்பட வேண்டும் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உணவு நிறுவனங்களும் தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டம் 1958 மற்றும் விதிகள் 1959-இல் விதி 42 B-யின் படி தமிழில் பெயர் பலகை வைத்திருக்க வேண்டும்.
தொழிற்சாலைகள் சட்டம் 1948 மற்றும் விதிகள் 1950 விதி 113-இன் படி அனைத்து தொழிற்சாலைகளிலும் மேற்கண்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு தமிழில் பெயர் பலகையில் வைக்கப்பட வேண்டும். மேலும், நிறுவனங்களின் பெயர் பலகையானது தமிழில் முதன்மையாகவும் பின்னர் ஆங்கிலத்திலும் அதன் பின்னர் அவரவர் விரும்பும் மொழிகளில் அமைக்கப்பட வேண்டும். தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைத்து கடைகள், நிறுவனங்கள். உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பாக மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்ட அளவிலான குழுவில் தொழிலாளர் துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம். தமிழ் வளர்ச்சித் துறை, உள்ளாட்சித் துறை, வணிகர் சங்கங்கள், நிறுவனங்களின் சங்கங்கள் தொழிற்சாலைகளின் கூட்டமைப்புகள் உறுப்பினராக நிறுவனங்களின் சங்கங்கள் தொழிற்சாலைகளின் கூட்டமைப்புகள் உறுப்பினராக செயல்பட்டு வருகின்றனர். இக்குழுவினர் அனைத்து கடைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பள்ளி கல்லூரிகளில் தமிழ் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்து, விழிப்புணர்வினை ஏற்படுத்தி 15.05.2025க்குள் 100 சதவிகிதம் தமிழில் பெயர் பலகை வைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும் 15.05.2025 வரை தமிழ் பெயர் பலகை வைப்பதற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் தமிழ் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்டு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் அபராதம் விதிக்க வேண்டும்.1948 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவன விதிகள் (TNSE), விதி 18 (அபராதம்)-ன் கீழ் தமிழில் பெயர் பலகை வைக்கப்படவில்லையெனில் ரூ.2000/- அபராதத் தொகை விதிக்கப்படும்.
எனவே, தருமபுரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து கடைகள், வணிகர் சங்கங்கள், உணவு நிறுவனங்கள். பள்ளி, கல்லூரிகள், தொழிற்சாலைகள் சங்கங்கள் தங்கள் உறுப்பினர்களுக்கும் இந்த தகவலை தெரிவித்து தமிழ் பெயர் பலகைகள் தங்கள் நிறுவனங்கள் மற்றும் கடைகளில் 100 சதவீதம் அமைத்திடுவதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.