தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று பொதுப்பணித்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. முன்னதாக கேள்வி நேரத்தில் ஆரணியை தனி தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அதிமுகவின் சட்டசபை உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் கோரிக்கை வைத்தார்.
அதேபோல அரசு கொறடா கோவை செழியன் டெல்டா மக்களின் மனம் குளிர கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
இதற்கு பதில் கூறிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், 8 மாவட்டங்களை ஏற்படுத்துவதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். எட்டு மாவட்டங்களை புதிதாக உருவாக்குவதற்கு ஆலோசனை நடத்தி வருகிறோம்.
இது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும். புதிய மாவட்டம் என்ற கோரிக்கைக்கு நிதி நிலைமையைப் பொறுத்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று கூறியுள்ளார்.