தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் TNSED செயலியில் மட்டுமே வருகையினைப் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்குக் அனுப்பி உள்ள கடிதத்தில்; மாணவர்கள் இடைநிற்றலால் ஏற்பட்டுள்ள குறைபாட்டினை சரி செய்ய மாணவர்கள் மீது முழுக்கவனம் செலுத்த அறிவுறுத்த வேண்டும். இன்று முதல் ஆசிரியர்களும், மாணவர்களும் செயலி மூலமாக வருகைப்பதிவு மேற்கொள்ள வேண்டும். மேலும் வழக்கமான பதிவேட்டில் வருகைப்பதிவேடு செய்யக்கூடாது. ஆசிரியர்கள் விடுமுறை விண்ணப்பத்தை TNSED செயலியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றம் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் உபரி பணியிடங்கள் இருப்பின், தேவைப்படும் அரசுப்பள்ளிகளுக்கு ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் வழங்க வேண்டும்.
பாேக்சோ கமிட்டியினை பள்ளிகள் மற்றும் கல்வி அலுவலகங்களில் அமைத்து, அதன் விவரத்தை அனுப்ப வேண்டும். ஆசிரியர்கள் தொடர் விடுப்பில் இருக்கும்போது, கற்பித்தல், கற்றல் தடைபடாமல் இருக்க மாற்று ஆசிரியரோ அல்லது விடுமுறை முடிந்து வந்த ஆசிரியர் தொடர் சிறப்பு வகுப்புகள் நடத்திட வேண்டும். பள்ளிகளில் இடிக்கப்பட வேண்டிய கட்டடங்களின் விவரங்களை மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறைக்குத் தெரிவிக்க வேண்டும். அனைவருக்கும் இடை நிலைத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கட்டடங்கள் இடிக்க வேண்டி இருந்தால், பள்ளி மேலாண்மைக்குழுவின் மூலம் இடித்துக்கொள்ளலாம். முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளி ஆய்வு பணிகளை முக்கியமாக மேற்கொள்ள வேண்டும். ஒவ்வாெரு பள்ளியிலும் மாணவர்கள் வருகை கல்வித்தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Also Read: குடியிருப்பு பகுதிகளில் சூரியசக்தி மேற்கூரைக்கு மானியம்… வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும்…!