சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 46-ஆக உயர்ந்துள்ளது..
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் மேற்குப் பகுதியில் உள்ள மலைப் பகுதியில் நேற்று 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீன நிலநடுக்க வலையமைப்பு மையம் தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி மதியம் 12:25 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் மையம், 29.59 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 102.08 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் 16 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக சீன நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையம் லுடிங்கின் கவுண்டி இடத்திலிருந்து 39-கிமீ தொலைவில் உள்ளது மற்றும் மையப்பகுதியைச் சுற்றி 5-கிமீ எல்லைக்குள் பல கிராமங்கள் உள்ளன.
இந்த நிலநடுக்கத்தில் 46 பேர் உயிரிழந்ததாகவும், 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புக் குழுவினர் விரைந்துள்ளதால், உயிரிழப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறந்தவர்களில், 29 பேர் லூடிங் கவுண்டியை நிர்வகிக்கும் கன்சி திபெத்திய தன்னாட்சி மாகாணத்தைச் சேர்ந்தவர்கள், மற்ற 17 பேர் யான் நகரத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்..
பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.. குடிநீர், மின்சாரம், போக்குவரத்து, தொலைத்தொடர்பு உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளும் சேதமடைந்துள்ளன.
இதனிடையே இந்திய தூதரம் இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “செப்டம்பர் 5 அன்று சிச்சுவானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்த உயிர்களுக்கு இதயப்பூர்வமான இரங்கல்கள் மற்றும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்” என்று ட்வீட் செய்துள்ளது.
மக்களின் உயிரை காப்பாற்றுவதை முதன்மைப் பணியாகக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி, உயிரிழப்புகளைக் குறைக்க முழு அளவிலான மீட்பு முயற்சிகளுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். நிலநடுக்க கண்காணிப்பை வலுப்படுத்துதல், இரண்டாம் நிலை பேரிடர்களுக்கு எதிராக பாதுகாத்தல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான இடவசதியை வழங்குதல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அவர் அறிவுறுத்தி உள்ளார்..
320 கூடாரங்கள், 2,200 நிவாரணப் பொருட்கள் ஆகியவை அடங்கிய முதல் தொகுதி நிவாரணப் பொருட்களுடன், நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சீனாவின் செஞ்சிலுவைச் சங்கம் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.. நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவ ஒரு பணிக்குழுவையும் அங்கு அனுப்பியுள்ளது.