பள்ளி திறக்கப்படும் நாளன்றே இரண்டாம் பருவத்திற்குரிய பாடபுத்தகங்கள் உள்ளிட்டவற்றை உரிய மாணவர்களுக்கு வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் காலாண்டு தேர்வு செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 8-ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டது.
பள்ளிக் கல்வி இயக்குநரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு இன்று முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளி திறக்கப்படும் நாளன்றே இரண்டாம் பருவத்திற்குரிய பாடபுத்தகங்கள் உள்ளிட்டவற்றை உரிய மாணவர்களுக்கு வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்; 2023-2024 ஆம் கல்வியாண்டில் , காலாண்டுத் தேர்வு விடுமுறைக்குப்பின் அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்திற்கு பள்ளிகள் திறக்கும் நாள் 03.10.2023 ஆகும்.
பள்ளி திறக்கப்படும் நாளன்றே இரண்டாம் பருவத்திற்குரிய பாடபுத்தகங்கள் உள்ளிட்டவற்றை உரிய மாணவர்களுக்கு வழங்கிட ஏதுவாக பள்ளிகளுக்கு முன்கூட்டியே திட்டமிட்டு அனுப்பி வைத்திட தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மேலும் , இப்பொருள் சார்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை விவரத்தினை பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு அறிக்கையாக அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.