பணிக்கு வரும்போது மதுபானம் அருந்தக்கூடாது என்ற அதிகாரிகளின் உத்தரவால், காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் மதுபானத்துடன் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியைச் சேர்ந்தவர் காவல் உதவி ஆய்வாளர் பசுபதி (55). இவருக்கு, மதுபானம் குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இவர் மது அருந்திவிட்டு பணிக்கு வருவதாகவும் அடிக்கடி புகார் எழுந்தது. இதுபற்றி உயரதிகாரிகளுக்கும் தகவல் சென்றுள்ளது.
இதையடுத்து, உதவி ஆய்வாளர் பசுபதியை அழைத்து உயர் அதிகாரிகள் கண்டித்துள்ளனர். மேலும், பணி நேரத்தில் இனி மதுபானம் குடிக்கக்கூடாது என்றும் இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியிருந்த பசுபதி, அதிகாரிகளின் இந்த உத்தரவால் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மதுபானத்துடன் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து குடித்து நேற்று தற்கொலை செய்து கொண்டார். இவரது உடல் பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.