3 கோடி புதிய ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்குவதற்கு தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது.
தமிழ்நாடு மின் வாரியத்தில் ஏற்படும் செலவினங்களை குறைக்கவும், மின் பயன்பாட்டில் கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மை இருக்கவும், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கொண்டுவரப்போவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்திருந்தது. இதற்கான பணிகளும் நடந்து வருகிறது. இதற்கிடையே, கடந்த மாதம் சென்னையில் மின் வாரிய இயக்குனர்கள் குழு கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கு, மீண்டும் டெண்டர் கோருவது உள்ளிட்ட பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதையடுத்து, தற்போது ஸ்மார்ட் மீட்டருக்கான டெண்டரை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. அதாவது, 3 கோடி புதிய ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்குவதற்கான டெண்டர் கோரி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 2026ஆம் ஆண்டுக்குள் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த மத்திய அரசு கெடு விதித்துள்ள நிலையில், ரூ.20 ஆயிரம் கோடி செலவில் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் தமிழ்நாட்டில் பொருத்தப்பட உள்ளன.
இந்த ஸ்மார்ட் மீட்டர்கள் மூலம் மின் கணக்கீட்டில் நடைபெறும் முறைகேடுகள் தடுக்கப்படும் என கூறப்படுகிறது. ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டால், ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று மின் கணக்கீடு எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. கட்டண விவரம் நுகர்வோரின் செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பி வைக்கப்படும். அதேபோல், மின்சார திருட்டு தடுத்தல், ஒரே இடத்தில் இருந்து மின் கணக்கீடு செய்தல், உங்கள் வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டாலும், அதை மின்சாவாரிய அலுவலகத்தில் இருந்தபடியே தெரிந்து கொள்ள முடியும். இவையெல்லாம் ஸ்மார்ட் மீட்டர் மூலமாக பொதுமக்களுக்கு கிடைக்கும் நன்மைகளாகும்.