டெல்லியில் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் ரூ.2,000 கோடி மதிப்பிலான, போதைப் பொருள் பயன்படுத்த தயாரிக்கப்படும் வேதிப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இந்த வழக்கில் என்சிபி அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக தியாகராய நகரின் ராஜன் தெருவில் உள்ள திரைப்பட இயக்குநர் அமீரின் அலுவலகத்திலும் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரூபாய் 2000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கைதான நிலையில் அவருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்பட்ட இயக்குனர் அமீர் சமீபத்தில் டெல்லி சென்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன் ஆஜரானார்.
இந்த நிலையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன் ஆஜரான சில நாட்களில் இயக்குனர் அமீருக்கு சொந்தமான இடங்களில் இன்று திடீரென அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்ய அமீர் வீட்டுக்கு சென்ற போது அவருடைய வீடு பூட்டி இருந்ததாகவும் அதன் பிறகு 10 நிமிடங்கள் காத்திருந்து அமீர் வந்தவுடன் சோதனையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.