பொதுவாக பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் மட்டுமல்ல, ஆண் பிள்ளைகளை பெற்றவர்களும் தங்களுடைய பிள்ளைகள் தங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று நினைப்பது இயல்பான விஷயம்தான். ஆனால், அனைத்து விஷயங்களும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்று நினைப்பது மிக, மிக தவறு.
அவரவருக்கு என தனி விருப்பு, வெறுப்பு இருக்கத்தான் செய்யும். அதை மதிக்காமல் ஒரு சிலர் செய்யும் செயலால் பல்வேறு இன்னல்கள் வந்து சேர்க்கிறது. அந்த வகையில், தெலுங்கானாவில், தன்னுடைய காதலனை மணந்து கொண்ட பெண்ணுக்கு, இறந்து விட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்துள்ள தந்தையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய ஒரே மகள் நந்தினி. இந்த நிலையில், நந்தினி ஒரு இளைஞரை காதலித்து வந்ததாக தெரிகிறது. ஆனால், இந்த காதலில் குமாருக்கு விருப்பமில்லை என்று சொல்லப்படுகிறது.
ஆகவே, எங்கே மகள் தன்னுடைய காதலனோடு சென்று விடுவாரோ என்று பயந்து போன குமார், உடனடியாக வேறொரு மாப்பிள்ளை பார்த்து, அவசர, அவசரமாக அந்த பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்தார். ஆனால், எதிர்பாராத விதமாக அந்த பெண்ணுக்கு, திருமணம் செய்து வைத்த மாப்பிள்ளை உயிரிழந்தார்.
இதன் காரணமாக, அதிர்ச்சி அடைந்த நந்தினி, அதன் பிறகு இரண்டாவதாக தன்னுடைய காதலனை கரம் பிடித்ததாக கூறப்படுகிறது. இது குமாருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக தெரிகிறது.
இதனால், விரக்தியடைந்த அவர் எடுத்த முடிவு தான், தற்போது தெலுங்கானா மாநிலத்தில் பேசுபொருளாக மாறி உள்ளது. அதாவது தன்னுடைய காதலனோடு திருமணம் செய்து கொண்டு, தன் பேச்சைக் கேட்காமல் சென்று விட்டாரே என்ற கோபத்தில் தான் பெற்ற மகள் என்று கூட பார்க்காமல், நந்தினி இறந்து விட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து, காரியம் செய்துள்ளார் குமார். இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.