2023-24ம் ஆண்டிற்கான ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “அரசாணை (நிலை) எண். 163, உயர்கல்வி (பி2)த் துறை, நாள்: 19.07.2018 –இல் ஊரக கண்டுபிடிப்பாளர் விருதினை அறிவியல் நகரம் மூலமாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணை இடப்பட்டது. இதன் அடிப்படையில் 2023-24 ஆம் ஆண்டிற்கான ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுக்கான விண்ணப்பங்கள் விண்ணப்பதாரார்களிடம் இருந்து வரவேற்கப்படுகிறது. அரசாணை, விண்ணப்பப்படிவம் மற்றும் வழிகாட்டுதல் குறிப்புகள் ஆகியவற்றை அறிவியல் நகர இணைய தளம் www.sciencecitychennai.in-ல் “அறிவிப்புகள்” என்ற தலைப்பின் கீழ் விண்ணப்பதாரார்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.சமுதாயத்திற்கு பயனளிக்கும் இரண்டு சிறந்த ஊரக கண்டுபிடிப்புகளுக்கு இவ்விருது வழங்கப்படும்.
இவ்விருதிற்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு சான்றிதழ் மற்றும் தலா ரூ.1.00 இலட்சம் பரிசுத் தொகையாகவும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுவர். இவ்விருதிற்கான முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்டங்களின் ஆட்சியர்களின் வாயிலாக அறிவியல் நகரத்திற்கு 31.08.2024 அன்று மாலை 5.30 மணிக்குள் முதன்மை செயலர்/ துணைத்தலைவர், அறிவியல் நகரம், உயர் கல்வித் துறை, பி.எம்.பிர்லா கோளரங்க வளாகம், காந்தி மண்டபம் சாலை, சென்னை – 600 025 என்ற முகவரிக்கு வந்து சேர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.