ஆட்டின் தலையில் அண்ணாமலை படத்தை மாட்டி நடுரோட்டில் ஆட்டை வெட்டி அவரது நாடாளுமன்ற தோல்வியை திமுகவினர் கொண்டாடிய விவகாரத்தை அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இதையடுத்து, திமுகவினர் பல இடங்களில் ஆட்டுக்கு அவரது போட்டோவை அணிவித்து நடுரோட்டில் வெட்டி அதன் ரத்தத்தை ரோட்டில் தெளித்து கொண்டாடினர். இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க கோரி பாஜக வழக்கறிஞர் ஏற்காடு ஏ மோகன்தாஸ் பொதுநல மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், இந்த விவகாரத்தில் ஏற்கனவே புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி இது போன்ற சம்பவங்கள் கிரிமினல் குற்றம் மட்டும் அல்லாது இது விலங்குகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் படி குற்றமாகும். இதுபோன்ற சம்பவங்கள் ஒரு தவறான முன்னுதாரணத்தை உருவாக்கும். அரசியல் கட்சி தலைவர்கள் போட்டோவை அணிவித்து மக்கள் மத்தியில் ரோட்டில் விலங்குகளை துன்புறுத்தி வெட்டுவது உடனடியாக தடுக்கப்பட வேண்டும் எனவும் இது சம்பந்தமாக தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் வாதிட்டார்.
வாதத்தை ஏற்றுக் கொண்ட பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் அமர்வு, இது போன்ற விஷயங்களை ஏற்க முடியாது என காட்டமாக தமிழக அரசு வழக்கறிஞரிடம் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து தமிழ்நாடு அரசு ஒரு வார கால அவகாசத்திற்குள் உடனடியாக பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒரு வார காலத்திற்கு ஒத்திவைத்துள்ளார்.
Read More : தங்கத்தின் எடை மற்றும் அளவை கவனமாக நோட் பண்ணுங்க..!! இதையெல்லாம் பரிசோதனை செய்யுங்க..!!