துருக்கி மற்றும் சிரியாவில் இன்று அதிகாலை 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது..
தென்கிழக்கு துருக்கி மற்றும் சிரியாவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.. 7.8 என்ற அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.. துருக்கியில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது..
இதே போல் வடமேற்கு சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில்,கட்டிடங்கள் முழுவதும் இடிந்து விழுந்து தரைமட்டமாகின.. கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கி உள்ளதால் அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.. மக்கள் கட்டிடங்களை விட்டு வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது..இந்த நிலநடுக்கம் சிரியாவின் மாகாண தலைநகரான காசியான்டெப்-ல் இருந்து 33 கிலோமீட்டர் (20 மைல்) தொலைவில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது… இது 18 கிலோமீட்டர் (11 மைல்) ஆழத்தில் மையம் கொண்டிருந்தது, மேலும் 10 நிமிடங்களுக்குப் பிறகு வலுவான 6.7 அதிர்வு ஏற்பட்டது.
துருக்கியின் கஹ்ரமன்மராஸ் மாகாணத்தில் உள்ள பசார்சிக் நகரில் 7.4 என்ற அளவிலான நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தில் 10 பேர் பலியானதாக மாகாண் ஆளுநர் சாலிஹ் அய்ஹான் தெரிவித்தார்.
அண்டை மாகாணங்களான மலாத்யா, தியார்பாகிர் மற்றும் மாலத்யாவில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.. எனினும் உயிரிழப்புகள் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. வடக்கு நகரமான அலெப்போவிலும் மத்திய நகரமான ஹமாவிலும் சில கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக சிரியாவின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதே போல் லெபனான், பெய்ரூட் ஆகிய இடங்களிலும் நிலநடுக்கம் பதிவானது.. இதனால் பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் கூடினர்.. மத்திய கிழக்கில் பனிப்புயல் வியாழன் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
துருக்கியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நிலையில், 1999ல் வடமேற்கு துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் சுமார் 18,000 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.