கள்ளக்குறிச்சி சம்பவத்தால் பள்ளிக்கல்வித்துறைக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களை சார்ந்த பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நெய்வேலியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ”தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சிஇஓ, டிஇஓ ஆகியோர் தங்கள் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நேரடியாக சென்று அடிக்கடி ஆய்வுகள் நடத்த வேண்டும். ஆய்வின் போது, சிஇஓ தலைமை ஆசிரியர்களை சிலர் கோபத்துடன் கேள்விகள் கேட்பார்கள். அது தனிப்பட்ட பிரச்சனையாக கருதக்கூடாது. பள்ளியின் வளர்ச்சிக்காக என்று கருத வேண்டும்.

சிஇஓ-க்கள் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களை அழைத்து கற்றல் திறன் குறித்து விவாதிக்க வேண்டும். கற்றல் திறனை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். மாவட்ட கல்வி அதிகாரிகள் ஊதியத்திற்காக வேலை செய்யாமல் தான் இருக்கும் துறையில் கல்வியில் ஒரு மாற்றத்தை உருவாகிவிட்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் செயல்பட வேண்டும். அப்போதுதான் ஓய்வு பெறும் போது நிம்மதி கிடைக்கும். பள்ளிகல்வித்துறை நல்ல பெயர் எடுத்த நிலையில், கள்ளக்குறிச்சி சம்பவத்தால் பள்ளிக்கல்வித்துறைக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் என்ன நடந்தது என்று கல்விதுறை அதிகாரிகள் விசாரணை செய்ய வேண்டும். ஒரு பிரச்சனை நடந்தால் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுப்பது குறித்து ஆய்வு நடத்த வேண்டும். 3 மாவட்டங்களிலும் பின் தங்கிய மாணவர்கள் அதிகம் உள்ள மாவட்டம் கடலூர் மாவட்டம். அங்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது”. இவ்வாறு அவர் கூறினார்.